Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/Elanampattiyaar/?%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

சித்தர்கள் வரலாறு

இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள் .... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் அடிப்படையில் 64 ஆயகலைகள், 48 அருட்கலைகள், 9 கடவுட்கலைகள், 9 தெய்வீகக் கலைகள், 9 நோய்க் கலைகள், 9 பேய்க்கலைகள், 9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் செயலகங்களாக ஆதியில் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் படைக்கப் பட்டன.

கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும், தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக வளர்ந்து விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத் தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் இருக்கின்ற இந்து மதத்தில்தான் இடையீடு இல்லாத முறையான தொடர்ந்த வளர்ச்சி நிலைகளில் காண முடிகின்றது. எனவேதான், உலக மதங்கள்  அனைத்தையும் இந்து மதத்தின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.