Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/?%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

குருதேவர் யார் - சுருக்க விளக்கக் கட்டுரை

 "... ஒரு மாபெரும் உலக முதல் இனத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்த்தித் தொடர்ந்து துரோகிகளாலும், அப்பாவிகளாலும், கூலிகளாலும் அடக்கி ஒடுக்கித் தாழ்த்தியே வாழ்ந்து வரும் ஒற்றுமையும், அறிவுக்கூர்மையும், கட்டுப்பாடும் உடைய ஓர் இனத்தை எதிர்த்து நேரடிப் போர் புரியத் தயாராகி வரும் அருளாட்சி நாயகமே யாம்!..."

  - குருதேவரின் எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகம்

 (1) இவரே இந்த மண்ணுலகம் தோன்றிய ஐநூறுarasayogi_colour.jpg கோடியாண்டு கால வரலாற்றில் அருளாட்சியை நிலை நாட்டுவதற்காகத் தோன்றிய பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாவார். இவருக்குப் பிறகு மீண்டும் அருளாட்சியை நிலைநாட்ட முப்பத்தாறு (36) பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள் என்பதே மெய்யான இந்துமத வரலாற்றின் முழுமை.

  ஏனெனில், வழிபடு நிலையினர்கள், இம்மண்ணுலக சித்தர்கள், அருட்பட்டத்தவர்கள், அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள், சங்கராச்சாரியார்கள், ஆதிசங்கராச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், ஆதிசிவாச்சாரியார்கள், பரமாச்சாரியார்கள், ஆதிபரமாச்சாரியார்கள், ஈசுவராச்சாரியார்கள், ஆதி ஈசுவராச்சாரியார்கள், புத்தர்கள், மகாவீரர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள், பத்தியார்கள், சத்தியார்கள், சித்தியார்கள், முத்தியார்கள், பதினெண்சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள் ... முதலிய அருளுலக நிலையினரின் வகைகளில் ஒவ்வொரு வகையிலும் (48) நாற்பத்தெட்டுப் பேர்கள் தோன்றுவார்கள் ... என்ற சட்டதிட்டத்தை வைத்துத்தான் மெய்யான இந்துமதத்தை உருவாக்கினார்கள் பதினெண்சித்தர்கள்.

  இந்தப் பேருண்மையை முறையாகவும் நிறையாகவும் புரிந்து கொள்வதைப் பொறுத்துத்தான் இந்து மதத்தின் மலர்ச்சியும் வளர்ச்சியும் ஆட்சிமீட்சியும் அமைந்துள்ளது.

(2) காலவேகங்களாலும், கருத்து மாற்றங்களாலும், மானுட இனப் போராட்டங்களாலும் ... மெய்யான இந்துமதத்தின் ஏட்டறிவிலும், பட்டறிவிலும் ஏற்பட்டு விடக் கூடிய தேய்நிலைகளையும் நோய்நிலைகளையும் பேய்நிலைகளையும் ஆய்வு செய்து அகற்றி; மெய்யான இந்துமதத்தைத் தூய்மையும், வாய்மையும், துய்ப்பு நிலையும் பெறுமாறு செய்வதற்காகத் தூண்டுபவர்களே பதினெண் சித்தர் பீடாதிபதிகள்.

  இவர்களே குருபாரம்பரியம் (The Religious History), அரச பாரம்பரியம் (The Political History), இலக்கிய பாரம்பரியம் (The Social History and the History of Language and Literature) என்ற மூன்று பெரும் வரலாற்றுத் தொடர்நிலை யறிக்கைகளை வழங்கித்தான் இந்துமத விழிச்சி, எழிச்சி, செழிச்சி, வளவளர்ச்சி, மறுமலர்ச்சி முதலியவைகளை உருவாக்குவார்கள்.

 இதற்காக இவர்கள் சாகாக் கல்வி, தெய்வீகக் கல்வி, கடவுட் கல்வி, அருட்கலைக் கல்வி ... எனப்படும் பலவகையான கல்விகளைக் கற்றுத் தேர்ந்து முதிர்ந்து நூற்றெட்டு (108) அருட்பட்டங்களைப் பெற்றாக வேண்டும். இதன்படி, இவர் அயராது முயன்று எழுபத்தாறு (76) அருட்பட்டங்களைப் பெற்றுள்ளார். மீதியுள்ள முப்பத்திரண்டு (32) பட்டங்களையும் பெறுகின்ற முயற்சியால் அருளுலக மாணாக்கராகவே (The Student of Divine, Mystical, Esoteric .... Doctrines) வாழ்ந்து வருகிறார்.

(3) இவர் இராசிவட்ட நிறைவுடையார், நல்லிலக்கண மார்புடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், அருளாட்சி நாயகம், இந்துமதத் தந்தை, ஞானத்தந்தை, ஞானாச்சாரியார், குருதேவர், குவலய குருபீடம், ... என்று எழுபத்தாறு (76) பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் என்று கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறை காயாகவே செயல்பட்டு வருகிறார்.

  இவர் சாதி, இன, மொழி, நாட்டு ... வேறுபாடுகளோ, வெறிகளோ இல்லாமல் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும்’ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

  இவர் ‘மதம் ஒரு சமூக விஞ்ஞானமே’, ‘மதமே மனிதப் பண்பைப் பாதுகாத்துப் பயிர் செய்யக் கூடியது’, ‘மதமே கலைகளுக்கும் அறிவியல்களுக்கும் தாய்’, ‘மதமே பொறுமையையும், பொறுப்புணர்ச்சியையும் ஈன்றெடுப்பது’, ‘மதமே தனிமனித, குடும்ப, சமுதாய அமைதியையும், நிறைவையும், நிம்மதியையும், சமாதானத்தையும் விளைவிக்கும் ஆற்றலுடைய உழவன்’, ‘மதமே மனித வாழ்வுக்குரிய பொருளை வழங்குவது’, ‘மதமே மனித வாழ்வின் வேக, தாக, மோக வெறிகளை நெறிப்படுத்தும் ஆற்றலுடையது’, ..... என்ற கருத்து விளக்க வாசகங்களை வழங்கி உலக மத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார்.

 எனவே, உலக மதங்கள் அனைத்துக்கும் மூலமாக, தாயாக உள்ள மெய்யான இந்துமதம் என்கின்ற சித்தர் நெறியின் மறுமலர்ச்சிக்காக அனைவருக்கும் அழைப்பு விடுப்பதையே தம் வாழ்வாகக் கொண்டிருக்கிறார் இவர்.

அ.வி.தி. தலைமைச் செயலாளர்
பரமாச்சாரியார்

(பின் குறிப்பு:- இந்தக் கட்டுரை 1986இல் எழுதப்பட்டது. 1986க்குப் பின்னால் குருதேவர் மீதம் உள்ள அருட்பட்டங்களையும் பெற்றுச் சிறந்து நிற்கின்றார்.)