Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/11thPeedam/?%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%26nbsp%3B

ஞானாச்சாரியார் வரலாறு 

- தமிழரின் சிந்தனையைத் தேடி!

  1. ஞானாச்சாரியார் வரலாறு  - தமிழரின் சிந்தனையைத் தேடி!
      1. முன்னுரை
      2. இவர் கூறியுள்ள புரட்சிக் கருத்துக்களில் சில:
      3. அறிமுகவுரை
      4. அணிந்துரை
    1. ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் வரலாற்றுச் சுருக்கம்
      1. நிறைவுரை
      2. சித்தர் இலக்கியம்
      3. இந்து மத வரலாற்றுப் பேருண்மைகள்

முன்னுரை

இந்து வேத பாடசாலை, பதினெண் சித்தர் மடம், இந்து முன்னேற்றக் கழகம்,  காரணோடை,  சென்னை - 67

ஞானாச்சாரியார் என்ற தலைப்பில் மிகச் சிறிய அளவில் வெளியிடப்படும் இந்தப் புத்தகம், இந்துக்களிடையில் எண்ணப் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக் கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார்.

விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது.

இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும் வாழையடி வாழையெனத் தோன்றிய ஞானாச்சாரியார் இவர்.

இவர், இந்தக் கலியுகத்தில், இந்து வேதமும் இந்து மதமும் செல்வாக்கிழந்து விட்டன என்பதை உணர்ந்து, அதைச் சரி செய்வதற்காகவே! தஞ்சைப் பெரிய கோயில் எனும் கற்கோயிலையும், சில சிறிய பெரிய கற்கோயில்களையும் புதிதாகக் கட்டுவித்தார். பல பழைய செங்கற் கோயில்களை, கருங்கற் கோயில்களாகப் புதுப்பித்தார். இவற்றின் இயக்கச் சத்தியாக சொற்கோயில்கள் எனும் பல புதிய இலக்கியங்களை எழுதினார். அத்துடன், நாட்டில் வழக்காற்றில் இல்லாமல் புதை பொருள்களாக இருந்த பல பத்தி இலக்கியங்கள் மீண்டும் செல்வாக்குப் பெறும்படி செய்தார். அவற்றுள், 'சைவ சமயத்திற்கு உரிய பதினோரு திருமுறைகளும்', 'வைணவ சமயத்திற்குரிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்' குறிப்பிடத் தக்கவை.

இவர் "தமிழர்கள்தான் அருளுலகுக்கே மூலவர்கள், காவலர்கள், நாயகர்கள், வாரிசுகள்" என்று மிகத் தெளிவாகத் தமது நூல்களில் எழுதுகிறார். மேலும், இவருடைய 'குருபாரம்பரியம்', 'இலக்கிய பாரம்பரியம்', 'அரச பாரம்பரியம்' எனும் நூல்களில் உலகம் தழுவிய பொதுநோக்கில் மத வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, சமுதாய வரலாறு, அரசியல் வரலாறு முதலியவைகள் விளக்கப் படுகின்றன. மொத்தத்தில் இவரே ஓர் உலக வரலாறாக விளங்குகிறார்.

இவருடைய வரலாறு, வாழ்வியல் போதனைகள், சாதனைகள்,... மிகப் பெரிய அளவில் பல தொகுதிகளாக எழுதப்பட்டும்; போதிய வசதி வாய்ப்பு இல்லாமையால் வெளியிடப்படாமல் இருக்கின்றன. எனவேதான், இச்சிறு புத்தகம் தமிழ்மொழிப் பற்றாளர்கள், தமிழ் இனப் பற்றாளர்கள், தமிழ் நாட்டுப் பற்றாளர்கள், இந்து வேதப் பற்றாளர்கள், இந்து மதப் பற்றாளர்கள்,... முதலியவர்களுடைய உதவியைப் பெறுவதற்காகவே வெளியிடப்படுகிறது.

இவர், தம் காலத்தில், 'குமரி முதல் இமயம் வரை பரவிக்கிடந்த இந்து வேதமும், இந்து மதமும்' நலிந்து, மெலிந்து, தேய்ந்து, ஓய்ந்து, மாய்ந்திடும் நிலையில் இருந்ததைக் கண்டு; தம் காலத்தில் இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் பாதுகாப்பதற்காகப் பெருமுயற்சியினைச் செய்து ஓர் 'இந்து மத அருட்பேரரசை' உண்டாக்கினார். அதற்காக 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' என்ற ஆன்மீக இயக்கத்தின் மூலம் 'தனி மனித வாழ்வையும், குடும்ப வாழ்வையும்' செப்பனிடும் பணியைத் துவக்கிட்டார். இந்த இ.ம.இ., இ.மு.க. எனும் இரு அமைப்பும் இவருக்கு முன்னால் வாழ்ந்திட்ட பத்தாவது ஞானாச்சாரியாரால் எப்படி உருவாக்கிச் செயல்பட்டனவோ அப்படியே உருவாக்கிச் செயல்பட்டிட்டார்.

இவர், பாலுகர் பள்ளி (பால் + உகர் = பாலுகர், பால் குடிக்கும் பருவத்தையுடைய சிறு குழந்தைகள் பள்ளி), சிறாஅர் பள்ளி, இளைஞர் பள்ளி என்று மூன்று வகைப்பட்ட கல்வி நிறுவனங்களை பொருளுலகுக்காக நிறுவியிருந்தார். இதேபோல், அருளுலகுக்காக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் எனும் நான்கையும் நிறுவினார். இவை நான்கிலுமே இந்து வேத பாடசாலை, சேவலோன் போர்க்கலைப் பயிற்சி நிலையம், ஓகாசன், யோகாசனக் கலை மாமன்றம், தவப்பள்ளி, பட்டிமன்றம்,... முதலியவைகளையெல்லாம் தோற்றுவித்து நிகழ்த்தினார். இப்படி, இவர் கல்வித் துறையின் நிறைந்த வளர்ச்சிக்கு மூலவராக விளங்கினார்.    

இவர் கூறியுள்ள புரட்சிக் கருத்துக்களில் சில:

  1. தமிழர்களின் உள்ளங்களும், இல்லங்களும்தான் அருட்பயிர்களின் விதைப்பண்ணைகள், நாற்றுப் பண்ணைகள், நாற்றங்கால்கள்.
  2. தமிழ்மொழிதான் கடவுள் மொழி, தெய்வ மொழி, தேவமொழி, வேதமொழி.
  3. தமிழ்நாடுதான் கடவுளர்களின் பிறப்பிடம், இருப்பிடம், காப்பிடம்.
  4. ஒரு நாட்டுக்குரிய கடவுள்கள்; அந்நாட்டவர்க்கு மட்டுமே உதவுவார்கள்.
  5. ஒரு மொழிக்குரிய கடவுள்கள், அந்த மொழியினருக்கு மட்டுமே உதவுவார்கள்.
  6. ஓர் இனத்துக்குரிய கடவுள்கள், அந்த இனத்தவருக்கு மட்டுமே உதவுவார்கள்........

முதலியவை குறிப்பிடத் தக்கவை. எனவே, இவரைப் பற்றிய நூல்கள் வெளிவர அனைவரும் உதவுங்கள்.

அறிமுகவுரை

கடந்த மூன்று உகங்களில்; இம்மண்ணுலகின் மூலமதமாகவும், மூத்த மதமாகவும் உள்ள தமிழரின் மெய்யான இந்து மதத்தின் குருபீடமாக, தலைவராக, பாதுகாவலராகத் தோன்றிட்ட ஞானாச்சாரியார்களில் பதினோராவது ஞானாச்சாரியாராகத் தோன்றியவரே தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவரும், இவருக்கு முன் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்தான் கலியுகத்தில் தோன்றியவர்கள். இந்த இருவருக்கும் மட்டும்தான்; மற்ற ஞானாச்சாரியார்களுக்கு ஏற்படாத அளவுக்குத் தமிழரின் மெய்யான இந்து மதத்தைச் செப்பனிடல், பாதுகாத்திடல், பொய்யானதும் போலியானதுமான ஹிந்து மதத்தை எதிர்த்துப் போராடல்,.... முதலிய பல பொறுப்புக்கள் ஏற்பட்டிட்டன.

இவற்றால்தான், பத்தாவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய அமராவதியாற்றங்கரைக் கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார்; பதினோராவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார். இவர்கள் இருவரின் எழுத்துக் குவியல்களாலும், செயல் திட்டங்களாலும்தான்; 'தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான மெய்யான இந்துமதம்...' முதலியவை தனித் தன்மையோடும், பெருமையோடும் உரிமை வாழ்வு வாழ்கின்றன.

பதினோராவது ஞானாச்சாரியார் அவர்கள், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு உருவாக்கிய இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு மூலம், பத்தாவது ஞானாச்சாரியாரின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்ற முயன்றார். ஆனால், சோழப் பேரரசின் மன்னர்கள், அரசர்கள், வேளிர்கள், வேளார்கள், அமைச்சர்கள், மற்ற அரசியல் அதிகாரிகள்,... தங்கள் போக்கில் பொருளுக்கும் புகழுக்கும் பேராசை கொண்டு அலைந்தார்களே தவிர; ஞானாச்சாரியாரின் அருளாட்சி முயற்சிகளுக்கு உதவவில்லை.

இவற்றை எண்ணியே! இவர், பத்தாவது ஞானாச்சாரியார் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம் முதலான நாற்பத்தெட்டு வகை நிறுவன நிருவாகங்களையும் நிலையான வாழ்வு பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டிட்டார். இதற்காகக் 'குறிப்பேடு' என்று சிறுசிறு கட்டுரைகள் எழுதி; அவற்றிற்கு நகலெடுத்து நாடு முழுதும் அனுப்பினார். அவற்றைக் கோயில் 'குருக்கல்' மூலம் மக்களுக்குப் படித்துக் காட்டச் செய்தார். திருவிசைப்பா பாடிய சித்தரடியார்கள், இக்குறிப்பேடுகளைப் பூசையின் போது 'குருமார்', இசையோடு பாடுதற்கேற்பக் 'குருபாணி'களாக எழுதினார்கள்.

இவர் 'தம்மைப் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல் ஆவணங்களில் இடம் பெறக் கூடாது'; என்று குருவாணை வழங்கியதால்தான், அரசியல் சாசனங்களால், கல்வெட்டுக்களால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால், இவருடைய நூல்களும், இவருடைய மகன் கருவூர்த் தேவர் நூல்களும், பேரன் திருமாளிகைத் தேவர் நூல்களும்தான் இவருடைய வரலாற்றை விளக்குகின்றன.

பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்.

 

அணிந்துரை

ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்;11th Pathinensiddhar Peedam தாமெழுதிய (300) முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால்; "அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள் தான்; அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும்." அதற்காக, இவர்கள் 'கடவுளர் நாடான தங்களுடைய தமிழ் நாட்டையும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியினையும், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல தங்களின் மெய்யான இந்து மதத்தையும் மிகுதியாக எண்ணியெண்ணிச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு எக்காரணம் பற்றியும் தங்களுடைய நாட்டின் மீதோ, மொழியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பொ, மறுப்போ, எதிர்ப்போ ஏற்பட்டிடாது! ஏற்பட்டிடாது! ஏற்பட்டிடாது!.

'தமிழர்கள் வாழ்க்கைத் தேவைகளால் நாட்டையோ, மொழியையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள நேரிட்டாலும் அந்த மாற்றம் தற்காலிகமாகத் தான் இருக்க வேண்டும்.' அப்பொழுதுதான், தமிழ்நாட்டை என்றென்றும் தமிழரின் நாடாகக் காத்திடலும், தமிழ் மொழியை என்றென்றைக்கும் அருளமுது வழங்கும் உரிமைமிக்க செழிச்சி நிலை உடையதாகவும், தமிழர் மதமான மெய்யான இந்துமதத்தை மானுட இன மேம்பாட்டிற்கு உதவக் கூடிய ஆட்சிநிலை உடையதாகவும் காத்திட முடியும். அதாவது, தமிழர்களுக்கிடையே உள்ள பற்றும், பாசமும், ஒற்றுமையும், ஒருமைப்பாடும் என்றென்றும் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சிமாட்சியும் உடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஞானாச்சாரியார், 'தமிழ் மொழியின் உயிரெழுத்தொலி, மெய்யெழுத்தொலி, உயிர்மெய் யெழுத்தொலி எனும் மூன்று வகை எழுத்தொலிகள் மூன்று பக்கங்களாக இருந்து உருவாக்கும் முக்கோணச் சத்தி பீடம்தான் அருளுலகின் அடிப்படை' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இச்சத்தி பீடத்திற்கே ஆபத்து வந்ததைத் தடுக்க முற்பட்ட இவரது முயற்சிகளைத்தான்; இவருடைய "யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரும், காவிரியாற்றங்கரை மகாபாரதப் போரும்" என்ற குறிப்பேடு விளக்குகிறது. இவருடைய போதனைகளும், சாதனைகளும், வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளும் பல நூல்களாகப் பல தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அவையெல்லாம் அச்சேறி நூல் வடிவில் இன்றைய தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறது பதினெண் சித்தர் மடம்.

இவரெழுதியுள்ள குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்; இவருடைய சமய சமுதாய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இவர் தமது குருபாரம்பரியத்தில்,

"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, எம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்,"

என்று கூறுவதையே இங்கு அணிந்துரையாகக் குறிப்பிடுகிறோம்.

-- பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்

 

  1. தமிழரின் மத உணர்வே தமிழ் மொழிப்பற்றையும், தமிழின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டுடன் வளர்க்கிறது.
  2. தமிழின மொழி மத விடுதலையுணர்வே தமிழரின் தனித் தன்மை மிக்க வாழ்வியல் பிழைக்க, தழைக்க, உழைக்கிறது.
  3. தமிழின மொழிப் பெருமித உணர்வும், உரிமையுணர்வும் அன்னிய மொழிகளால், மதங்களால் கரைந்து மறைந்திடாமல் காப்பது பதினெண் சித்தர் மடமே.
  4. தமிழின மொழி, மத விடுதலை வீரர்களின் பாடிவீடாக, பாசறையாக இருந்து வருவது பதினெண் சித்தர் மடமே.
  5. அன்னியரின் பழங்கதைகளும், பயனற்ற பழக்க வழக்கங்களும், கவைக்குதவாத கற்பனைகளும், சடங்குகளும்; பைந்தமிழரைப் பாழாக்கிடாமல் பாதுகாப்பது பதினெண் சித்தர் மடமே.
  6. அருளை அநுபவப் பொருளாக அடையவும்; பிறர்க்கு வழங்கவும் வல்லாரை உருவாக்கும் அருட்கோட்டமாகப் பணிபுரிகிறது, பதினெண் சித்தர் மடம்.
  7. அருளுலகின் விழிச்சிநிலை, எழிச்சிநிலை, செழிச்சிநிலை பேணும் பத்திப் பாட்டையாக, சத்திச் சாலையாக, சித்திச் சோலையாக, முத்தி மன்றாக, தவப் பள்ளியாக, வேள்விக் கூடமாக விளங்குகிறது பதினெண் சித்தர் மடம்.
  8. பதினெண் சித்தர் மடத்தால் கல்லும், மண்ணும், பொன்னும், பயிரினங்களும், உயிரினங்களும் கடவுளாக்கப் படுவதாலேயே மனிதனின் பிறப்பிறப்பு பற்றிய அச்ச கூச்ச மாச்சரியக் கவலைகளும், துன்பங்களும் களையெடுக்கப்பட்டு வருகின்றன.
  9. தஞ்சைப் பெரிய உடையார் கோயில் தமிழினத்தின் மிகப்பெரிய எழிச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.
  10. தஞ்சைப் பெரிய உடையார் கோயில் அருளுலகில் தமிழ்மொழியின் பெருமைக்கும், உரிமைக்கும் ஏற்பட்டிட்ட மிகப் பெரிய தாழ்ச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.

 

ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் வரலாற்றுச் சுருக்கம்

இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.

அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் பஃறுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.

இச்சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.

சிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.

சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்

2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்

3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்

4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்

(இந்த 1992இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,

4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)

இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.

கடந்த மூன்று உகங்களில், இந்த இந்து மதத்தைக் காலப்போக்கில் ஏற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும், தளர்ச்சி நிலைகளிலிருந்தும், இழப்பு நிலைகளிலிருந்தும் சரி செய்து காத்திட ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றி ஞானாச்சாரியாராகப் பணிபுரிந்திட்டனர். இவர்கள் 1. அனாதிக கருவூறார், 2. ஆதிக கருவூறார், 3. தொன்மதுரைக் கருவூறார், 4. தென்மதுரைக் கருவூறார், 5. ப·றுளியாற்றங்கரைக் கருவூறார், 6. குமரியாற்றங்கரைக் கருவூறார், 7. கபாடபுரத்துக் கருவூறார், 8. தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார், 9. வைகையாற்றங்கரைக் கருவூறார் எனப்படுவார்கள்.

நான்காவது உகமான இக்கலியன் உகத்தில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாக அமராவதியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3001 முதல் 3251 வரை செயல்பட்டிட்டார்), பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகக் காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3886 முதல் 4141 வரை செயல்பட்டிட்டார்) தோன்றிட்டார்கள்.

இவர்கள் இருவருக்கு மட்டுமே மற்ற ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் ஏற்படாத பணிநிலைகள் ஏற்பட்டன. அதாவது, கலியன் உகம் பிறந்து 1359 ஆண்டுகள் கழித்து இந்த இந்துமத இந்தியாவுக்குள் வந்திட்ட பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேதமதக் கலப்பாலும், சமசுக்கிருதமொழி ஆட்சியாலும் புதிதாக உருவாகிட்ட ஹிந்து மதம் என்பதிலிருந்து, நான்கு உகங்களாக இருந்து வரும் பதினெண் சித்தர்களுடைய தமிழ்மொழியை ஆட்சிமொழியாக உடைய இந்துமதத்தை வேறுபடுத்திப் பிரித்துத் தனியாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இம்முயற்சியிலேயே இவர்கள் இருவர் வாழ்வும் முடிவின்றி நிறைவு பெற்றது.

பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று உகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதன்மூலம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி நல்ல வளவளர்ச்சியைப் பெற்று மீண்டும் ஆட்சி மீட்சியைப் பெற்றது. ஆனால், பாண்டிய மன்னனான ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் இவருடைய அறிவுரைப்படி செயல்படாததால் அனைத்தும் சிதைந்து சீரழிந்தன. மதுரை மாநகரம் இடித்துத் தகர்க்கப்பட்டுப் பேரழிவிற்குள்ளாக்கப் பட்டது; தமிழ்ச்சங்க ஏடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன; தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அப்பேரழிவுகளால் தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான இந்துமதம்,,,, முதலிய அனைத்தும் நலிந்து மெலிந்து 'அனாதை நிலையையும்', 'அடிமைநிலையையும்' பெற்றிட்டது.

அப்பேரழிவுகளையும், இழிவுகளையும், இழப்புகளையும் ஈடுகட்டுவதற்காகவே; பத்தாவது ஞானாச்சாரியார் 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பையும்; அதன் கீழ் அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம், தமிழ் மெய்ஞ்ஞான சபை, முத்தமிழ்ச் சங்கம்,... முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் உண்டாக்கினார். அவற்றையெல்லாம் நிருவகிக்க வாழையடி வாழையாகப் பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார் என்ற நான்கு வகையாரும் தோன்றுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு; தான் கட்டிய கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் சென்று நீள் தவத்திலாழ்ந்தார்.

இவரைப் போலவே, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் தமது முயற்சியில் முழுமையான வெற்றி காண முடியாத நிலையில்; தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்று நீள் தவத்திலாழ்ந்திட்டார்.

இவரையடுத்து, இப்பொழுது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியிருக்கும் அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலயகுருபீடம், நிறையக்ஞர், பரபிறம்மம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள், பத்தாவது பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகக் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் என்ற நான்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான 'மெய்யான இந்துமதத்தின்' வரலாறு, தத்துவ விளக்கம், செயல் சித்தாந்த விளக்கம், அருள் நிலையங்கள் பற்றிய விளக்கம், அருளாளர்கள் பற்றிய விளக்கம் முதலியவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும், அருளை அநுபவப் பொருளாக வழங்கக்கூடிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கி 48 வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில் மூலக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருட்கோட்டமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

எனவேதான், இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள தமிழின மொழிமதப் பற்றாளர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்படுத்திடும் பணியில் பதினெண் சித்தர் மடத்தின் அனைத்து வகையான செயல்திட்டங்களையும் செயலாக்குகிறார். இதன்படிதான், அருளாட்சி நாயகமாக வாழ்ந்து இந்துமதப் பேரரசு எனும் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிச் செயல்பட்டிட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் வரலாறு, வாழ்வியல், போதனை, சாதனை பற்றிய விளக்கங்களைச் சிறுசிறு நூல்களாக மலிவு விலையில் வழங்கும் பணியைத் துவக்கி உள்ளார்.

ஞானாச்சாரியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெளிப்பட்டுச் செயல்பட்டுள்ளார்கள். எனவே, ஒவ்வொருவருடைய வரலாறும் பேரிலக்கியமாக, இந்துமத விளக்கமாக, இந்துமதப் போதனையாக, சாதனையாக விளங்கிடும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது.

இந்தப் பதினோராவது பதினெண் ஞானாச்சாரியார், பொதிகை மலையின் ஒரு குகையில் தவத்திலாழ்ந்திருக்கும் போது; அக்குகை வெடித்துச் சிதறி இவர் வெளிப்பட்டிட்டார். அங்கு, இவர் வழிபட்டிட்ட 'சத்திலிங்கம்', தஞ்சைப் பெரிய கோயிலிலும்; 'சிவலிங்கம்' கங்கையை முடியில் கொண்டான் புரத்திலும்; 'இலிங்கம்' தாரமங்கலத்துக் கோயிலிலும் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. இம்முப்பெரும் கோயில்களன்றி; இவர் 48 சிவலிங்கம், 48 சத்திலிங்கம், 48 இலிங்கம் என்று 144 இடங்களிலே அருளாட்சிக்காகக் கருவறைகளை அமைத்திட்டார்.

இவர், கற்சிலைகளைச் செதுக்குவதில் சிறந்த சிற்பியாகவும், ஐம்பொன்களை உருக்கி உலோகச் சிலைகளை வார்ப்பதில் வல்லவராகவும், மிகச்சிறந்த ஓவியக் கலைஞராகவும், கட்டிடக் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். இவருடைய சிற்பக்கலைத் திறமையும்; இவர் உருவாக்கிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களின் அருட்பணி விரிவாக்கத் திட்ட வெற்றிகளும்; இவரெழுதி வெளியிட்டிட்ட பதினெண் சித்தர்களின் பூசாமொழிகள், பூசாவிதிகள், பூசாமுறைகள், பூசாநெறிகள், குருமார் ஒழுக்கம், குருபாணிகள், கோயில் ஒழுங்கு, கருவறைப் புத்துயிர்ப்பு, குடமுழுக்கு நூல், ஐந்தர, ஐந்திர, ஐந்திற நூல்கள், பூசைக்குரிய தர, திர, திற நூல்கள் பதினெட்டு, ஆறு வகைப்பட்ட வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பழம் பிறப்புணர்தல், மறுபிறப்பறிதல், ... முதலிய நூல்களின் பயன்களும்; இந்துமத மறுமலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் மிகச் சிறப்பாகப் பயன்பட்டிட்டன. அத்துடன், இவர் பல்வேறு துறைகளைப் பற்றி எழுதிய நூல்களும் சேர்ந்து மொத்தம் முன்னூறுக்கும் மேல் இருந்தன என்பதால்; இவரால் தமிழ் மொழியின் வளவளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் மிகச் சிறந்த உயரிய நிலைகளை எய்தின.

இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதத்திற்கு உரியவைகளாகவே இருந்திட்டன என்பதால்; இவருக்கு முன் வாழ்ந்த பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி மதுரைக் கரந்த மலையில் திரட்டி வைத்திருந்த நான்கு தமிழ்ச் சங்கங்களுடைய நூல்களின் சிதைந்த பகுதிகளையெல்லாம் தேடிச் சேர்த்து 1877 தொகை நூல்கள் வெளியிட்டார். அவற்றால், தமிழிலக்கியம் மிகுந்த வளமும் வலிவும் பெற்றது.

இருந்த போதிலும், 'இவர், தாம் உருவாக்கிய தமிழின விழிச்சி நிலையும், எழிச்சி நிலையும், செழிச்சி நிலையும், தாம் அருளாட்சி நாயகமாக இருந்து செய்யக் கூடிய மதவழி அரசியல் புரட்சிக்குப் பயன்பட வேண்டும்' என்று திட்டம் தீட்டினார். அத்திட்டப்படியே மானாமதுரைக் கோயில் பூசாறி பெருந்தேவனார் அவர்களைக் கொண்டு யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரையும்; தேரெழுந்தூர்க் கோயில் பூசாறி கம்பரைக் கொண்டு கங்கையாற்றங்கரை இராம இராவணப் போரையும்; தமிழினச் சந்திரகுல சூரியகுல அரசபாரம்பரியங்களை விளக்கிடுவதற்காகக் காப்பியங்களாகப் பாடச் செய்தார்.

இதேபோல், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் தத்துவ நாயகமாக இருந்து மதவழிச் சமுதாயப் புரட்சி செய்த்தால் தோன்றிட்ட பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களையும், 63 நாயன்மார்களின் பாடல்களையும் தொகுத்துத் தமிழின விழிச்சிக்காகவும், எழிச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் பயன்படுத்தினார். இப்படி, இவர், மிகப்பெரிய இலக்கியவாதியாக, சமுதாயவாதியாக, சமயவாதியாகச் செயல்பட்டிட்டதால்தான்; இவர் மிகச் சிறந்த அரசியல்வாதியாகச் செயல்பட முடிந்தது.

அதாவது, இவர், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு; தமிழ்நாட்டில் தமிழனால் ஆளப்படக் கூடிய பேரரசே இல்லாத காலக்கட்டத்தில்; இந்துமதத்தின் பெயரால் ஓர் அருட்பேரரசை உண்டாக்கித் தமிழனை ஆளச் செய்தார். அது முதல், தொடர்ந்து தமிழர்களே ஒன்பது பேர் இந்துமத அருட்பேரரசின் மன்னர் மன்னராகி ஆளும்படிச் செய்திட்டார்.


அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள்,

  1. முதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன்,
  2. பரகேசரி விசயாலயன்,
  3. முதலாம் ஆதித்தன்,
  4. முதலாம் பராந்தகன்,
  5. கண்டராதித்தர்,
  6. அரிஞ்சயன்,
  7. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்),
  8. உத்தம சோழன்,
  9. முதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன்

எனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித் தத்துவத்திற்கும், அருளாட்சி நாயகச் செயல் சித்தாந்தத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியேயாகும். இப்படி, இவர் மிகச் சிறந்த அரசியல் தத்துவ மேதையாக, அரசியல் சித்தாந்த வித்தகராக விளங்கிய போதிலும், இவர் தன்னுடைய அருட் பேரரசின் அல்லது அருளாட்சி அமைப்புப் பணியின் வெற்றிச் சின்னமாகக் கட்ட ஆரம்பித்த தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைத் தமது விருப்பம் போல் கட்ட முடியவில்லை.

இவர்தான், கலியன் உகத்தில் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்திற்கும் இந்துமத ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும் ஏற்பட்டிட்ட வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும் ஈடுகட்டுவதற்காகவே; கருவறையின் மீது நெடிதுயர்ந்த கோபுரமுடைய 'முதல் கருவறைக் கோபுரக் கோயிலாகத்' தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைக் கட்டினார். ஆனால், அக்கோபுரத்தின் உச்சியை 40 மாதங்களுக்கு மேல் மூடாமல் மொட்டைக் கோபுரமாக வைத்திருக்க நேரிட்டது. அதனால், தஞ்சைக் கருவறைக் கோயிலிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு ஆவுடையாரின் பிடிப்பிலிருந்து கழன்று சுழல ஆரம்பித்தது.

ஏனெனில், முதலாம் இராசராச சோழனும் அவன் காலத்திய அரசியல் அதிகாரிகளும், அரச குடும்பத்தார்களும், பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் அருளூறு பூசைமொழியான அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழி வழியாகப் பெரிய உடையார் கோயிலில் குடமுழுக்கையும், அன்றாடப் பூசைகளையும் செய்திட ஒத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, இந்துமதத் தந்தையாக, ஞானாச்சாரியாராக, குவலய குருபீடமாக, அருளுலகப் பொருளுலக இருளை அகற்றும் அருளாட்சி நாயகமாகத் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதியால் உருவாக்கப்பட்ட குரு, குருமார், குருக்கல், பூசாறி எனும் நால்வர் மட்டும்தான் பெரிய உடையார் கோயிலில் பூசைகள் செய்ய வேண்டும்; அதாவது, கோயில் கருவறைகளில் பூசைகள் செய்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பூசைவிதியையும் ஒத்துக் கொள்ளவில்லை. இவற்றிற்கும் மேலாக, கோயிலில் பணிபுரியும் நாற்பத்தெட்டுவகையான ஊழியக்காரர்கள் அனைவரும் தமிழர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இவர் வெகுண்டு;

"என்றென்றைக்கும் நாடாளுகின்ற பொறுப்பிலுள்ள அரசியல் தலைவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள்... முதலானவர்கள் இக்கோயிலுக்குள் வந்து சென்றால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்"

-- என்று அருளாணை வழங்கிச் சென்றார்.

நீண்ட காலமாகத் தஞ்சைப் பெரிய கோயில் மொட்டைக் கோபுரமாக நின்றதும்; கருவறையிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு தன்னிலையிலிருந்து விடுபட்டு சுழன்றதும்; கோயில் சுற்று மண்டபத்தில் கருவறைகள் முழுமைபெறாமல் அரைகுறையாகவே நின்றதும்; கோயிலுக்குரிய சிவகங்கைக் குளம் வரை அமைக்கப்படவிருந்த காவல் தெய்வங்களின் கருவறைகளுக்கும், பரிகாரத் தெய்வங்களின் கருவறைகளுக்கும் உரிய குழிகள் தோண்டி சக்கரங்கள் வைக்கப்பட்ட நிலையிலேயே கட்டடங்கள் கட்டப்படாமல் நின்றுவிட்டதாலும்; பெரிய உடையார் கோயில் அருளுலகில் பொதுமக்களுக்கு மட்டுமே பாதுகாப்புத் தரக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டது. அதாவது, ஞானாச்சாரியாருடைய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட அருளாளர்களும், வாழையடி வாழையெனத் தோன்றும் அவர் வாரிசுகளும், அவர்களின் துணையைப் பெற்றவர்களும் மட்டுமே இப்பெரிய உடையார் கோயிலைப் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

எனவே, பதினோராவது ஞானாச்சாரியாராகிய இவர் இக்கலியுகம் 4141இல் (கி.பி.1040) பங்குனித் திங்கள் முழுநிலவு நாளன்று இத்தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அரச குடும்பத்தார்களுக்கு அழைப்பின்றி தமது அருட்பணி விரிவாக்கத் திட்டச் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், அருட்படையினர், தாம் உருவாக்கிய சிறுபள்ளிகள், பெரும்பள்ளிகள், சேவலோன் போர்க்கலைப் பயிற்சிப் பள்ளிகள்; தம்மால் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் மூலம் தயாரிக்கப்பட்ட 48 வகைக் கோயில் ஊழியக்காரர்கள், தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள் முதலியவர்களின் திருக்கூட்டத்தை மட்டும் கூட்டிக் கோபுரத்தையும், கோயிலையும் ஒருநிலைப் படுத்தினார். அன்று மாலையிலேயே, முழுநிலவுக்குரிய பருவப் பூசையைச் செய்து முடித்துப் பெரிய கோயிலில் உள்ள நிலவறைக்குள் குடும்பத்தாரோடு சென்று நிறைந்திட்டார்.

இவருக்குப் பிறகு இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் தொடர்ந்து பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் வழியாகச் செயல்பட்டு அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணியை நிறைவேற்றினார்கள். சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகப் பணியாற்றிய கருவூர்த் தேவர்; தமது தந்தையாரின் அருளாணைப்படி அவருடைய பெயரோ அல்லது அவரைப் பெற்றிய செய்திகளோ எந்த அரசியல் ஆவணங்களிலும் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய சித்த மருத்துவ நூல்கள், சித்தர் மருத்துவ நூல்கள், சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய நூல்கள், இசைக்கருவிகள், பாட்டின் பண்கள், பாடுவோர் இலக்கணம், ஆடல் நுணுக்கம் முதலியவை பற்றிய நூல்கள், ஓகநூல், யோகநூல், மோகநூல், போகநூல், விரிச்சிநூல், தொடுகுறி நூல், சகுனநூல், இரசவாதம், வசியம், ககனப்பயணம், உடல்சித்தி, உயிர்ச்சித்தி, ஞானசித்தி முதலியவைகளைப் பற்றிய நூல்கள் ... முதலிய நூல்களைக் கருவூர்த் தேவர் தஞ்சையிலிருந்த 'அருட்பணி விரிவாக்கத் திட்டக்குழுவின்' மூலம் நிலையான வாழ்வு பெறும்படிச் செய்தார்.

இந்த ஞானாச்சாரியார் எழுதிய குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனும் முப்பெரும் சமய சமுதாய அரசியல் இலக்கியங்களின் இறுதியில் 'நிலவறையின் வாயிலிலே' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்ற அருளுரைகள் உலக மானுடர் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொன்னுரைகளாக இருக்கின்றன. இவர் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கோயில் கட்டிடப்பணிகள் அனைத்தையும், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் பெருமளவில் நிறைவேற்றினார்கள். திருமாளிகைத் தேவருக்குப் பிறகே இம்மூவரையும் பற்றிய இன்னிசைப் பாடல் இலக்கியங்களை 'மூவர் தோற்றம்', 'மூவர் ஞான உலா', 'காவடிச் சிந்து', 'தாலாட்டு', 'உடுக்கை', 'கும்மி' ... எனும் பெயர்களில் இலக்கியங்கள் பிறந்தன. இப்பொழுது பதினெண் சித்தர் மடம் இவை அனைத்தையும் வெளிப்படுத்த முயலுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

 

நிறைவுரை

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் 'மெய்யான இந்துமதம்' மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது 'ஞானாச்சாரியார்' அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் 'எண்வகை ஆச்சாரியார்களில்' 1. பரமாச்சாரியார் 48 பேர், 2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர், 3. சிவாச்சாரியார் 48 பேர், 4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர், 5. ஈசுவராச்சாரியார் 48 பேர், 6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர், 7. சங்கராச்சாரியார் 40 பேர், 8. ஆதிசங்கராச்சாரியார் 31 பேர் தோன்றிவிட்டார்கள். எனவேதான், இவர் தமது காலத்தில் யாராவது ஓர் ஆச்சாரியார் தோன்றுவதற்குப் பெருமுயற்சிகள் செய்தார். அதன் பயனாகத்தான், சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சீர்காழித் திருஞான சம்பந்தப் பெருமானின் பாரம்பரியத்தில் வந்த சிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் கருணீக்க சைவ வேளாள மரபில் சேரநாட்டுக் காலடியில் 32வது ஆதிசங்கராச்சாரியார் தோன்றினார். ஆனால், ஞானாச்சாரியார் எதிர்பார்த்த பயன் விளையவில்லை. ஏனெனில், இந்த 32வது ஆதிசங்கராச்சாரியாரின் புலமையும், உழைப்பும்; கடைச்சங்கப் புலவர்களான ஆதிவால்மீகி, ஆதிவியாசர் முதலியோரின் உழைப்பும், புலமையும் மெய்யான இந்துமதத்துக்கு எதிரான பயனை விளைவித்தது போல் விளைவித்துவிட்டன. எனவேதான், இவர், தமது குருபாரம்பரியத்தில் ஆதிசங்கராச்சாரியார் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் ஆதிசங்கராச்சாரியார் பற்றி நிறையக் குறிப்பிடுகின்றார்கள். எனவேதான், 32வது ஆதிசங்கராச்சாரியாரின் வரலாறு மிகப் பெரிய அளவில் விரிவாக எழுதப்பட்டுப் பதினெண் சித்தர் மடத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


இனியாவது, 'தமிழின மொழி மத விடுதலை' முயற்சி தொடர்கதையாகி விடக்கூடாது. ஒவ்வொரு தமிழரும் தங்களின் ஞானாச்சாரியார், குருபீடம், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞானசபைத் தலைவர், அருளுலக வழிகாட்டி, வழித்துணை, சமுதாயத் தத்துவ நாயகம், அரசியலின் அருளாட்சி நாயகம் யாரென்பதை நன்கு எண்ணிச் செயல்பட வேண்டும். இன்னுமுள்ள இக்கலியன் உக 4,26,907 ஆண்டுகளிலாவது தமிழர்கள் தக்க தலைமையையும், வழிகாட்டியையும், வழித்துணையையும் பெற்றுச் சிறக்க வேண்டும். ஏனெனில், 'தமிழர்கள் தான் அருளுலகின் மூலவர்களாக, காவலர்களாக, வாரிசுகளாக, தத்துவ வித்துக்களாக, செயல்சித்தாந்த நாற்றுப்பண்ணைகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்'. எனவே, உலக அளவில் மானுட இனங்களும், மொழிகளும், மதங்களும் விடுதலை வாழ்வு பெற்றுச் சிறந்திட உழைத்திடும் பொற்காலம் உருவாகிடத் தமிழின மொழி மத விடுதலை முயற்சி விரைவில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

 

பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்

 

சித்தர் இலக்கியம்

நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் எனும் மூவகையினரின் படைப்புக்களே 'சித்தர் இலக்கியம்' எனப்படும். பொதுவாக, எல்லோருமே சித்தர் இலக்கியம் பாடல்களாக, கவிதைகளாக, செய்யுட்களாக இருப்பவையே என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், சித்தர்கள் உரைநடையில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். பூசாமொழி, பூசாவிதி, ஞானக் கும்மி, ஞானவெட்டி, தத்துவம் முதலியவைதான் குறைந்த உரைநடையை உடையவை.

சித்தர் இலக்கியத்தில், உடலியல், உயிரியல், மருத்துவம், கலை, தெய்வீகம் ... முதலிய அனைத்துத் துறைகளும் இடம் பெறுகின்றன. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய, இனிய, சுவைமிக்க மொழிநடையைப் பெற்றிருப்பனவே சித்தர் இலக்கியங்கள்.

 

அருளூறு காயந்திரி மந்தரம் (சத்தி காயந்திரி மந்தரம்)

 

"ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!"


ஒவ்வொருவரும் அன்றாடம் தனித்துப் பூசைகளில் 108 முறை ஓதி அருளைப் பெறும் காயந்திரி மந்தரம்.

இந்து மத வரலாற்றுப் பேருண்மைகள்

பிறப்பிடம்:     இளமுறியாக் கண்டம் (The lost Lemuria) எனும் கடலுள் மறைந்த 'குமரிக்கண்டம்'

காலம்:     பதினெண் சித்தர்களால் அனாதிக் காலத்தில் அதாவது கி.மு.43,71,101ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

மொழி :     தமிழ் மொழி

வழிபாட்டு நிலையம்:     108 வகைத் திருப்பதிகள், 243 வகைச் சத்தி பீடங்கள், 1008 வகைச் சீவாலயங்கள்

இந்துமத நூல்கள்:

இந்துமதப் பயன்கள்:     தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கையும் வடிவப்படுத்தி வளமான வாழ்வு பெறச் செய்தல்.

*ஆதாரம் : மூலப் பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனாரின் குருபாரம்பரியம்