Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/11thPeedam/?%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

ஞானாச்சாரியார்

பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்.

இந்த 'ஞானாச்சாரியார்' என்ற குருபீடம் வழிவழியாகத் தோன்றக் கூடியது. இக் குருபீடத்தால்தான்

1. சிவாச்சாரியார், 2. ஆதிசிவாச்சாரியார், 3. ஈசுவராச்சாரியார், 
4. ஆதி ஈசுவராச்சாரியார், 5. பரமாச்சாரியார், 6. ஆதிபரமாச்சாரியார்,
7. சங்கராச்சாரியார், 8. ஆதிசங்கராச்சாரியார்

எனப்படும் 'எண்வகை ஆச்சாரியார்கள்' தோன்றுவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும், இம்மண்ணுலகுக்குரிய நான்கு உகங்களில் தேவைக்கேற்ப மேற்படி எண்வகை ஆச்சாரியார்கள் தோன்றுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தால்தான் ஞானாச்சாரியார் எனும் குருபீடம் தமிழ் மொழியில் கி.மு. 43,71,101ஆம் ஆண்டில் வழங்கிய மெய்யான இந்துமதம் முழுமையான வடிவமைப்பை வலிமையாகவும், வளமையாகவும் இன்றுவரை பெற்றிருக்கிறது.,

பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் தோன்றும் 'ஞானாச்சாரியார்கள்' தொடர்ந்து இந்த 'ஞானாச்சாரியார்' என்ற குருபீடம் வழிவழியாகத் தோன்றிச் செயல்பட்டிடத் தங்கள் தங்களுடைய காலங்களில் மீண்டும் மீண்டும் 'பதினெண்சித்தர் மடம்' என்ற தொடர் அமைப்பை உருவாக்குவார்கள். இதன் மூலம் எல்லா வகையான அருட்பணிகளுக்கும் தேவையானவர்களைத் தயாரிப்பதற்காகக் 'கருகுலம்', 'குருகுலம்', 'தருகுலம்', 'திருகுலம்' என்ற நான்கு வகையான பல்கலைக் கழங்களை நிறுவிச் செயல்பட்டிடுவார்கள்.

இந்த 'ஞானாச்சாரியார்கள்'தான் இம் மண்ணுலகின் அருளுலக மூலக் கருவாக இருக்கும் இந்துமதத்தின் செயல்நிலைகளை ஒழுங்கு படுத்திடக் குரு, குருக்கள், குருமார், பூசாறி எனும் நால்வகை நிலையினரையும் செழுமைப் படுத்துகிறார்கள். தேவையேற்பட்டால் நாடெங்குமுள்ள மக்களில் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நால்வகையினரையும் உருவாக்குவார்கள்.

இம்மண்ணுலகுக்கு எல்லாவிதமான நன்மைகளும் அமைதியான சூழ்நிலையில் அன்பும், பாசமும், நட்பும் மிகுந்த வண்ணம் நிகழ்ந்தே வர வேண்டும். அதற்காகத்தான் ஞானாச்சாரியார் அருளுலகின் ஞான வித்துக்களாக, ஞான வாரிசுகளாக, ஞான மூலவர்களாக, ஞானக் காவலர்களாக உருவாக்கப் பட்ட தமிழர்களுக்குத் தலைவர்களாகவும், காவலர்களாகவும்  என்றென்றும் நின்று நிலவுகிறார்கள். எனவேதான்,

    'ஞானாச்சாரியாரே தமிழின ஆச்சாறியார்'

    'ஞானாச்சாரியாரே தமிழினக் குருபீடம்'

    'ஞானாச்சாரியாரே தமிழின ஞானசபைத் தலைவர்'

    'ஞானாச்சாரியாரே தமிழ் மொழிக் காவலர்'

    'ஞானாச்சாரியாரே தமிழ் மொழிப் பீடம்'

    'ஞானாச்சாரியாரே தமிழ்மொழித் தலைவர்'

    'ஞானாச்சாரியாரே தமிழினத் தலைவர்'

    'ஞானாச்சாரியாரே தமிழினக் காவலர்'

    'ஞானாச்சாரியாரே தமிழரின் இந்துமத மூலவர்'

    'ஞானாச்சாரியாரே இந்துமதத்தைக் காக்க வல்ல இந்துமதத் தந்தை'

    'ஞானாச்சாரியாரே இந்துமத அருளூற்றுக்களைப் பேணும் ஆற்றலுடைய கருகுல ஆதீனம்'

    'ஞானாச்சாரியாரே இந்துமத அருளாட்சி பேணும் குருகுல ஆருயிர்' .........

என்று பலவாறாகப் பதினெண்சித்தர்களுடைய நூல்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் நூல்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களின் நூல்களும், 'ஞானாச்சாரியார்' பற்றிய அரிய சிறப்பியல்புகளையும், சாதனைகளையும், போதனைகளையும் விளக்குகின்றன.

இப்படிப்பட்ட ஞானாச்சாரியார்களால்தான் கடந்த நான்கு யுகங்களெனும் 43,73,109 ஆண்டுகள் [அதாவது இன்றைய 2008 உடன் 'இந்துமத ஆண்டு' என்பதன் கணக்குப் படி முதல் மூன்று யுகங்களின் ஆண்டுகளும் இந்த 2008 ஆண்டுடன் கலியுகம் பிறந்து ஆகுகின்ற 5109 ஆண்டுகளையும் சேர்த்தே இந்த கணக்கு வழக்கில் உள்ளது. அதாவது, தமிழர்கள் கண் சிமிட்டும் நேரமான 'நொடிப் பொழுது' முதல் நான்கு யுகம் வரை மிகத் தெளிவாகக் கணித்துள்ளனர் என்பதே சிறப்பாகக் குறிப்பிடற்குரியது] எனப்படும் இந்த மிகப் பெரிய நெடிய வரலாற்றுக் காலம் முழுதும் 'தமிழ்மொழி', 'தமிழினம்', 'தமிழர் மதம்', 'தமிழர் அகப் பண்பாடு', 'தமிழர் புற நாகரீகம்', 'தமிழரின் மொழி மரபு', 'தமிழரின் இலக்கிய மரபு', 'தமிழரின் இலக்கண மரபு', 'தமிழினப் பற்று', தமிழ் மொழிப்பற்று', 'தமிழரின் உரிமையுணர்வு', 'தமிழினம் என்ற கட்டமைப்பு', ...... முதலியவைகளைச் சிந்தாமல், சிதறாமல், சிதையாமல், சீர்குலையாமல், சிறப்பு நலியாமல் .... காத்து வருபவர்களே 'ஞானாச்சாரியார்' எனப்படும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள்.

ஆனால், இவர்களையே மறந்தும், துறந்தும் செயல்படக் கூடியவர்களாகத் தமிழர்களின் ஒரு குறிப்பிட்ட தொகையினர் காலப் போக்கில் உருவாகிடுகின்றார்கள். அப்படி உருவாகிறவர்களின் அளவு ஒரு கணிசமான எல்லையைக் கடக்கும் போதுதான், ஞானாச்சாரியார்கள் தோன்றுகின்றார்கள். இச்செய்திதான் 'குருபாரம்பரியம்', 'இலக்கிய பாரம்பரியம்', 'அரசபாரம்பரியம்' எனும் முப்பெரும்  வரலாற்று நூல்களில்  [குருபாரம்பரியம் = சமய வரலாறு, இலக்கிய பாரம்பரியம் = மொழி வரலாறு, இலக்கிய இலக்கண வரலாறு, சமுதாய வரலாறு, அரச பாரம்பரியம் = அரசியல் வரலாறு எனும் இம்மூன்றும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளால் மட்டும் அவரவர் காலத்தில் எழுதப் படுகின்றன] தெளிவாகக் குறிக்கப் படுகின்றது. அதாவது, அடுத்தடுத்து தோன்றக் கூடிய ஞானாச்சாரியார்கள், தங்களுக்கு முன்பு தோன்றிய ஞானாச்சாரியார்களின் வரலாறுகளையும், தங்களுடைய கால வரலாற்றையும் தெளிவாக முப்பெரும் பிரிவாகப் பிரித்து எழுதிடுகின்றனர். இதுவே ஞானாச்சாரியார் மரபு. இவர்களின் போதனைகளும், சாதனைகளுமே 'தமிழ்மொழி',  'தமிழினம்', 'தமிழர் மதமான மெய்யான இந்துமதம்' .... முதலியவை.

எனவே, இன்றுள்ள தமிழர்கள் தங்களுடைய மொழிக்கும், இனத்துக்கும், பண்பாட்டுக்கும், நாகரீகத்துக்கும், வாழ்வியலின் உயிரோட்டத்துக்கும் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக இருக்கின்ற ஞானாச்சாரியாரை ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றுள்ள ஞானாச்சாரியார், பதினெண்சித்தர் மடாதிபதியாக, பீடாதிபதியாக, கருகுல ஆதீனமாகச் செயல்பட்டுத் தமிழின  மொழி மத விடுதலை இயக்கத்தையும், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தையும் விரைந்து, விரிந்து செயலாற்றி வருவதற்குத் தமிழராகப் பிறந்துள்ள ஒவ்வொருவரும் தங்களாலியன்ற முழு ஆதரவுகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். மேலும், இன்றுள்ள பதினெண்சித்தர் மடம்தான் தமிழினக் குருபீடம், தமிழின ஆச்சாரிய பீடம், தமிழினத்தின் தலைமைப் பீடம் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து, பிறருக்கு உணர்த்தியுமே செயல்பட்டாக வேண்டும்.

ஞானாச்சாரியார், தமிழின ஆச்சாரியக் குருபீடம்,
தலைமைப் பீடம்,
பதினெண்சித்தர் மடம்.